இலங்கையிலுள்ள இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்: தமிழக முதல்வர்
கொழும்பில் நடைபெறவுள்ள மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னதாக இலங்கை சிறையிலுள்ள 121 மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இவர்கள் அனைவரும் சென்னைப் பேச்சுவார்தைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.