உபி.யில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை: துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஏடிஎம்மைக் கொள்ளையடிக்க வந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், வங்கி ஊழியர்கள் மூன்று பேர் பலியாகினர். பாபுகஞ்ச் என்ற இடத்தில், மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைத் தெருவில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில், வேன் மூலமாகக் கொண்டுவரப்பட்ட ருபாய் நோட்டுகளை நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துப்பாக்கியுடன் அங்கு வந்த சிலர் கண்மூடித்தனமாக அவர்களை நோக்கிச் சுட்டுள்ளனர். இதில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். துப்பாக்கியால் சுட்ட நபர்கள் ஏடிஎம்மில் இருந்த லட்சக்கணக்கான பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.