விபத்தில் சிக்கிய காரை விட்டுவிட்டு பிரபல தெலுங்கு நடிகர் தப்பியோட்டம்: கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்
திருமலை: விபத்தில் சிக்கிய காரை விட்டுவிட்டு பிரபல தெலுங்கு நடிகர் தப்பியோடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தெலுங்கு திரையுலகில் பிரபல இளம் கதாநாயகன் ராஜ்தருண்.
இவர் பல்வேறு குறும்படங்கள் மற்றும் சூப்பிஸ்த்தா மாவா, உய்யாலா ஜம்பாலா உள்ளிட்ட சில தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இவர், தில்ராஜூ, சுரேஷ்பாபு ஆகியோரின் தயாரிப்பில் மேலும் 2 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
நேற்று அதிகாலை சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான காரை ராஜ்தருண் ஓட்டிச் சென்றுள்ளார்.
ஐதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் சென்றபோது திடீரென சாலை தடுப்பில் மோதிய கார், அங்குள்ள பள்ளத்தில் இறங்கியது. இதனால் காரில் இருந்து இறங்கிய ராஜ்தருண் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஐதராபாத் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு நின்ற காரை மீட்டுகொண்டுவந்தனர்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்குள்ள பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது விபத்திற்கு பின் காரில் இருந்து இறங்கிய நடிகர் ராஜ்தருண் இறங்கி கும்மிருட்டில் ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில், நடிகர் ராஜ் தருணை அழைத்து விசாரனை நடத்த ஐதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய காரை விட்டுவிட்டு பிரபல தெலுங்கு நடிகர் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.