பொருளாதார மந்தநிலை மிகவும் கவலையளிக்கிறது : ரகுராம் ராஜன் பேட்டி

தினகரன்  தினகரன்
பொருளாதார மந்தநிலை மிகவும் கவலையளிக்கிறது : ரகுராம் ராஜன் பேட்டி

புதுடெல்லி : ‘‘நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை மிகவும் கவலையளிக்கிறது. இப்பிரச்னைகளை சரிசெய்ய, தனியார் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் புதிய சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்’’ என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2018-19ம் நிதியாண்டில் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 2014-15ம் நிதியாண்டிலிருந்து மிகவும் குறைவான அளவு. தற்போதைய நிதியாண்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) 7 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. ஆனால் வளர்ச்சி இதைவிட குறைவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தொழில்கள் கவலையளிப்பதாக உள்ளது என பலர் கூறுவதை இப்போது நம்மால் கேட்க முடிகிறது.  இதற்கு ஏதோ ஒரு ஊக்குவிப்பு தேவை என தொழிலதிபர்கள் கூறுகின்றனர். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க நமக்கு புதிய சீர்திருத்தங்கள் தேவை. சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது சீர்திருத்தம் அல்ல. அது ஒரு யுக்தி நடவடிக்கை. நாட்டின் வளர்ச்சி வீதத்தை 2 அல்லது 3 புள்ளிகள் அதிகரிக்க, நாட்டை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற புரிதல்தான் நமக்கு இப்போது தேவை. மின்துறை மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நிலவும் பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்க புதிய சீர்திருத்தங்கள் தேவை. தற்போதுள்ள நிதி நெருக்கடியில் சலுகைகள், ஏதோ ஒருவிதமான ஊக்குவிப்பு போன்றவை நீண்ட காலத்துக்கு பயன் அளிக்காது. இந்திய சந்தைகள், இந்திய தொழில்கள், நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் நன்கு சிந்தித்து எடுக்கப்படும் சீர்திருத்தங்கள்தான் நமக்கு இப்போது தேவை. ஜிடிபி வளர்ச்சி குறித்து முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறிய சில விவாதங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். சில ஜிடிபி புள்ளிவிவரங்களை வைத்து, நாம் வளர்ச்சி வீதத்தை மிகை மதிப்பீடு செய்யலாம். ஜிடிபி கணக்கிடும் முறையை நாம், தனியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும். ஜிடிபி எண்கள், தவறான கொள்கை திட்டங்கள் வகுக்க காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். கடந்த 2008ம் ஆண்டு நிலவிய சர்வதேச நிதி நெருக்கடியை ஒப்பிடும்போது, உலக முழுவதும் வங்கிகள் தற்போது மோசமான நிலையில் இல்லை. நிதித்துறைகளில் தற்போது பெரியளவில் பிரச்னை இல்லை. வர்த்தகம் மற்றும் சர்வதே முதலீடுகளில்தான் உண்மையான பிரச்னை உள்ளது. அதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், உலக நாடுகள் தங்கள் சொந்த நலனுக்காக சில நடவடிக்கைகளை எடுக்கலாம். இது வித்தியாசமான உலகம். 2008ம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மீண்டும் வருமா என எனக்கு தெரியாது. ஆனால் வேறு வழிகளில் பிரச்னைகள் ஏற்படும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, புதிய பிரச்னைகளை தடுத்து நிறுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை