ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 40 பேர் பலி...போலீசார் தீவிர விசாரணை

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 40 பேர் பலி...போலீசார் தீவிர விசாரணை

காபுல்: ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஐ.எஸ். அமைப்பினரும் அங்கு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடை இருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அதிகாரப்பூர்வ தகவலை அதிகாரிகள் இன்று வெளியிடலாம் என கூறப்படுகிறது. கடந்த 7-ம் தேதி ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 145 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை