சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஆஷ்லி பார்தி

தினகரன்  தினகரன்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஆஷ்லி பார்தி

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸ்திரேலியா) தகுதி பெற்றார். கால் இறுதியில் மரியா சக்கரியுடன் (கிரீஸ்) மோதிய பார்தி 5-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 6-2, 6-0 என அடுத்த 2 செட்களையும் எளிதாகக் கைப்பற்றி வென்றார். இப்போட்டி 1 மணி, 44 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா - ஸ்வெட்லனா கஸ்னட்சோவா (ரஷ்யா) மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் கஸ்னட்சோவா 3-6, 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 18 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் மோதிய சோபியா கெனின் (அமெரிக்கா) 6-4, 1-6, 2-0 என முன்னிலை வகித்தபோது, காயம் காரணமாக நவோமி விலக நேரிட்டது. இதைத் தொடர்ந்து சோபியா அரை இறுதிக்கு தகுதி பெற்றார். வீனஸ் வில்லியம்சுடன் மோதிய சக அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட நோவாக் ஜோகோவிச் (செர்பியா), டானில் மெட்வதேவ் (ரஷ்யா), ரிச்சர்ட் காஸ்கே (பிரான்ஸ்), டேவிட் காபின் (பெல்ஜியம்) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

மூலக்கதை