86வது பிறந்த நாள் விழா: முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை... கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
86வது பிறந்த நாள் விழா: முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை... கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு

சென்னை: முரசொலி மாறன் 86வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது    சிலைக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், தொண்டர்கள் கொட்டும் மழையில் மரியாதை செலுத்தினர்.


திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த முரசொலி மாறனின் 86வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் திமுகவினரால் இன்று  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முரசொலி  மாறன் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி மாறன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று காலை 9. 10 மணிக்கு முரசொலி மாறன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொருளாளர் துரை முருகன், முதன்மைச் செயலாளர் டி. ஆர். பாலு எம்பி, மத்திய சென்னை தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன், மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்எல்ஏ, திமுக எம்பிக்கள் ஆர். எஸ். பாரதி,  டி. கே. எஸ். இளங்கோவன், சண்முகம், தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் மா. சுப்பிரமணியன், கு. க. செல்வம், கே. பி. பி. சாமி, தா. மே. அன்பரசன், எஸ். ஆர். ராஜா, மு. க. தமிழரசன், முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன், ரகுமான்கான்,  பகுதி செயலாளர்கள் அன்புதுரை, மதன்மோகன், ராமலிங்கம், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி. பி. மணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

திருக்குவளை, திருவாரூர், நாகை  மாவட்டம்  திருக்குவளையில் கருணாநிதி பிறந்த இல்லம் உள்ளது. இங்கு தற்போது படிப்பகம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த இல்லத்தில் உள்ள முரசொலி மாறனின் மார்பளவு சிலைக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   அதேபோல் திருவாரூர் அருகே காட்டூரில் கருணாநிதி தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் உள்ளது. இங்கு முரசொலி மாறனின் உருவ படத்துக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதேபோல் கோவை உட்பட தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரியிலும் முரசொலி மாறன் படத்துக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

.

மூலக்கதை