லார்ட்ஸ் டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு

தினகரன்  தினகரன்
லார்ட்ஸ் டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளிடையே நடந்து வரும் ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது. 2ம் நாளில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசிய நிலையில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 258 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பர்ன்ஸ் 53, பேர்ஸ்டோ 52, வோக்ஸ் 32, டென்லி 30 ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ், ஹேசல்வுட், லயன் தலா 3 விக்கெட், சிடில் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன் எடுத்திருந்தது. வார்னர் 3 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். பேங்க்ராப்ட் 5, கவாஜா 13 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பேங்க்ராப்ட் 13, கவாஜா 36, டிராவிஸ் ஹெட் 7 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலியா 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்திருந்தபோது, கனமழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஸ்டீவன் ஸ்மித் 13, மேத்யூ வேடு (0) ஆட்டமிழ்ககாமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிராடு 2, ஆர்ச்சர், வோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை