கோவாவில் விமான ஓடுதளத்தில் நாய்கள்: ஏர் இந்தியா விமானம் தரையிறக்க தாமதம்

தினகரன்  தினகரன்
கோவாவில் விமான ஓடுதளத்தில் நாய்கள்: ஏர் இந்தியா விமானம் தரையிறக்க தாமதம்

கோவா: கோவாவில் விமான ஓடுதளத்தில் நாய்கள் இருந்த காரணத்தினால் ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாமல் கடைசி நேரத்தில் தடைபட்டது. கோவாவின் டபோலிம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் அந்த விமானம் தரையிரங்க இருந்த நிலையில் ஓடுதளத்தில் 5 முதல் 6 தெரு நாய்கள் இருப்பதை விமானி பார்த்துள்ளார். உடனடியாக விமானத்தை தரையிறக்கும் முடிவை கைவிட்ட அவர் வானிலேயே வட்டமடிக்க ஆரம்பித்தார். பிறகு ஓடுதளத்தில் நாய்கள் இருக்கும் தகவலை விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானி கூறியுள்ளார். பிறகு ஓடுதளத்தில் இருந்த நாய்கள் விரட்டப்பட்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் நாய்கள் ஓடுதளத்திற்குள் சென்றதை அதிகாரிகள் பார்க்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடுதளத்தில் நாய்கள் மற்றும் பறவைகள் நுழைவதை தடுக்க கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை