திண்டுக்கல்லில் டிஎன்பிஎல் தொடர்... காரைக்குடியை கலங்கடித்த தூத்துக்குடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திண்டுக்கல்லில் டிஎன்பிஎல் தொடர்... காரைக்குடியை கலங்கடித்த தூத்துக்குடி

திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் சிவா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய தூத்துக்குடி அணியின் ஸ்ரீனிவாசன் 9 ரன், கமலேஷ் 2 ரன்களிலும், அபிஷேக் 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராஜ கோபால், வெங்கடேஷ் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ராஜ கோபால் 34 ரன்னில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, வெங்கடேஷ் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சிவா அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 87 ரன்கள் அடித்தார்.

இதனால் தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி அணியின் தொடக்க வீரர்கள் அனிருதா 5 ரன்னிலும், சூர்ய பிரகாஷ் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்கள் தூத்துக்குடி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் காரைக்குடி காளை அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது.

தூத்துக்குடி அணி தரப்பில் தமிழ் குமரன், செந்தில்நாதன் மற்றும் வெங்கடேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், இன்று மதியம் 3. 15 மணிக்கு திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் கோவை கிங்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகளின் 18வது லீக் போட்டியும், இரவு 7. 15 மணிக்கு அதே மைதானத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

.

மூலக்கதை