முக்கிய மேட்சுகளில் சொதப்பல் மேல் சொதப்பல் தினேஷ் கார்த்திக் கேரியர் முடிஞ்சுடுச்சி?: எல்லா வாய்ப்புகளும் பறிபோனதால் அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
முக்கிய மேட்சுகளில் சொதப்பல் மேல் சொதப்பல் தினேஷ் கார்த்திக் கேரியர் முடிஞ்சுடுச்சி?: எல்லா வாய்ப்புகளும் பறிபோனதால் அதிர்ச்சி

மும்பை: கடந்த 2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், அவரது சமகால வீரரான தோனியின் ஆதிக்கத்தால் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது. தோனி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டாலும், தினேஷ் கார்த்திக்கிற்கு அந்தளவுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

இருந்தாலும், அவ்வப்போது அணியில் சேர்க்கப்படுவதும், திடீரென நீக்கப்படுவதுமாகவே காலத்தை ஓட்டிவந்தார். ஒருவழியாக நடந்து முடிந்த இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து, இங்கிலாந்துக்கு அழைத்து சென்றனர்.



அப்படிதான் கூட்டிக்கிட்டு போனார்களே தவிர, அவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கவில்ைல. கடைசியில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளையும் அவர் சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை.

அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு, அவரது ஒட்டுமொத்த கேரியரையும் தூக்கிப் பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்தி கொள்ளாமல் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.

அவரது சொதப்பல் ஆட்டத்தால் கடுப்பான அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் கொஞ்சம் வைத்திருந்த நம்பிக்கையும் இழந்தது. நிதாஹஸ் டிராபி இறுதி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததால், டி20 அணியிலாவது இடம் கிடைத்து கொண்டிருந்தது.

ஆனால் உலக கோப்பையில் சொதப்பியதற்கு பின்னர் அந்த இடமும் பறிபோனது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியில் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.



ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகியோர் டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர். ஏற்கனவே பல வாய்ப்புகளையும் பறிகொடுத்து இருந்த தினேஷ் கார்த்திக்கிற்கு, டி20 வாய்ப்பும் கிடைக்காததால், இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடமில்லை என்பதையே நடந்து முடிந்த சம்பவங்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் கேரியரில், எல்லா வாய்ப்புகளையும் தினேஷ் இழந்ததால், அவர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

.

மூலக்கதை