சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?: உச்ச நீதிமன்றம் கேள்வி

தினகரன்  தினகரன்
சென்னைசேலம் 8 வழிச்சாலை குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?: உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், மாநிலங்களவை எம்பி அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்தது.மேலும், இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும், திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம் எனவும் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதி என்.வி.ரமணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘திட்டத்தின் தற்போதைய நிலையிலேயே சுற்றுச்சூழல் அனுமதி பெறக்கோருவது அவசியமற்றது. முதலில் நிலம் கையகப்படுத்திய பிறகு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட வேண்டும். எனவே, நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.இதைக்கேட்ட நீதிபதி, ‘‘கையகப்படுத்த திட்டமிட்ட நிலம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தவர்கள் யார்? இத்திட்டத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? சென்னை-சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாளை (இன்று) பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்ய சம்மதித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்’’ என்றும் உறுதி அளித்தார்.

மூலக்கதை