18,000 கோடி ஜிஎஸ்டி சுமை மத்திய அரசு மீது வங்கிகள் வழக்கு
புதுடெல்லி: வங்கிகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி விதித்ததை எதிர்த்து சில வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. அதிக பணம் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சில சேவைகளை இலவசமாக அளிக்கின்றன. சிலருக்கு ஆண்டு கட்டணம் இல்லாமலேயே வங்கி லாக்கர் வசதி கூட அளிக்கின்றன. இவற்றுக்கு சேவை வரி மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த 2018 ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு வங்கிகள் விளக்கம் தரவில்லை. இதை எதிர்த்து தடை உத்தரவு பிறப்பிக்க கோரி சில வங்கிகள் நீதிமன்றங்களை அணுகின. ஆனால், விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. ஆனால், வங்கிகள் வரி விதிப்பு முறையை கடைப்பிடிக்கவில்லை என மத்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து சில வங்கி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘மத்திய அரசின் முடிவால் வங்கிகள் 18,000 கோடி வரி செலுத்த வேண்டியுள்ளது. மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் அடிப்படையில் இலவச சேவை வழங்குவது வழக்கமானதுதான். இது வரி ஏய்ப்பு செய்வதாக ஆகாது’’ என்றனர்.