இந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றி | ஜூலை 22, 2019
ஆன்டிகுவா: விண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாத், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்தியா ‘ஏ’ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ‘ஏ’, விண்டீஸ் ‘ஏ’ அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த விண்டீஸ் ‘ஏ’ அணிக்கு சுனில் அம்ப்ரிஸ் (61), ஷெர்பான் ரூதர்போர்டு (65) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். தாமஸ் (1), கேப்டன் ராஸ்டன் சேஸ் (1), ஜோனாதன் கார்டர் (9), ராவ்மன் பாவெல் (4) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர்.
விண்டீஸ் ‘ஏ’ அணி 47.4 ஓவரில், 236 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் தீபக் சகார், நவ்தீப் சைனி, ராகுல் சகார் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ருதுராஜ் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்தியா ‘ஏ’ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாத் (99), சுப்மன் கில் (69), ஸ்ரேயாஸ் ஐயர் (61*) அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தனர். இந்தியா ‘ஏ’ அணி 33 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4–1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.