கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அரசுக்கு ஆதரவு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். இதனால், ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்ய கடந்த 12ம் தேதி முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் மனு கொடுத்தார். அதை ஏற்று சபாநாயகர் அனுமதி அளித்தார். நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கடந்த 18ம் தேதி தொடங்கியது. விவாதத்தின்போது இருதரப்பு எம்எல்ஏக்களும் ஆக்ரோஷமாக பேசியதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. விவாதம் நீண்டு கொண்டே போனதால், சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார். இதனால், பாஜவினர் கவர்னர் வஜுபாய் வாலாவிடம் முறையிட்டனர். அவர், மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தும்படி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இந்நிலையில் மறுநாள் பேரவை கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது வாக்கெடுப்பு மீதான விவாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இதையடுத்து  பிற்பகல் 3 மணிக்கு, ஆளுநர் மீண்டும் குமாரசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் படி உத்தரவிட்டிருந்தார். ஆளுநரின் இரண்டாவது கெடுவையும் நிராகரித்த முதல்வர் குமாரசாமி, ஆளுநரிடம் இருந்து எனது ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.  பின்னர், மேலும் விரிவான விவாதம் நடக்க வேண்டியிருப்பதால் திங்கட்கிழமை வரை சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்திருந்தார். இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும்,, கவர்னரின் கடிதம் குறித்து முதல்வர் குமாரசாமிவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  மேலும்  கடந்த வெள்ளிக்கிழமை சித்தராமையா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர தேவையில்லை. அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு வாதி, பிரதிவாதிகளின் வாதங்களும் நடைபெற்றது. இந்த மனு மீதான இடைக்கால தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் சார்பில் ஆஜரான முகுல்ரோகித்ஹி இந்த வழக்கை இன்றே அவசரமாக விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மூலக்கதை