அத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து?
சென்னை : காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான பிரதமர் மோடியின், தமிழக வருகை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக, தமிழக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதரை தரிசிக்க திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.
ஆனால், கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்த நேரத்தில், நிர்மலா சீதாராமன் அங்கு செல்வது சரியாக இருக்காது என்பதால், தரிசனம் செய்யும் திட்டத்தை, கடைசி நேரத்தில் ரத்து செய்ததாக, தமிழக, பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது.
அதே போல, நாளை( ஜூலை 23) பிரதமர் மோடி, சென்னை வருவார் என்றும், காஞ்சிபுரம் சென்று, அத்தி வரதரை தரிசிப்பார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசலில், பக்தர்கள் இறந்துள்ளதால், பிரதமர் வருகை, தேவையில்லாத விமர்சனத்திற்கு இடம் கொடுத்து விடும் என, பா.ஜ., அஞ்சுகிறது. எனவே, மோடியின் வருகை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.