பாஜ.வில் சேர வலியுறுத்தி திரிணாமுல் எம்எல்ஏ.க்களுக்கு கைது மிரட்டல்: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பாஜ.வில் சேர வலியுறுத்தி திரிணாமுல் எம்எல்ஏ.க்களுக்கு கைது மிரட்டல்: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் சேரா விட்டால் கைது நடவடிக்கைக்குள்ளாகி சிறை செல்ல நேரிடும் என்று மத்திய அரசு அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ``சிட்பண்டு நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், பாஜவுடன் தொடர்பில் இருக்கும்படியும், பாஜவில் இணையுமாறும் வற்புறுத்தப்படுகின்றனர். அப்படி செய்யவில்லையெனில் கைது நடவடிக்கைக்குள்ளாகி சிறை செல்ல நேரிடும் என்று மத்திய அரசு அமைப்புகளினால் மிரட்டப்படுகின்றனர்,’’ எனக் கூறினார்.மேலும் அவர் கூறுகையில், ``எம்எல்ஏ.க்கள் கட்சி மாறுவதற்காக பாஜ அவர்களுக்கு ₹2 கோடி பணமும், பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றும் கொடுக்கிறது. கர்நாடகாவில் போன்று நாடு முழுவதும் பாஜ குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படுகிறது என்றால் அதற்கு காரணம் எதிர்க்கட்சிகளே தவிர, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்ல. பாஜ.வினால் பறிமுதல் செய்யப்பட்ட கருப்பு பணத்தை திருப்பி செலுத்த கோரி வரும் 26ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்,’’ என்று தெரிவித்தார்.‘வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’ பத்திரிகையாளர்களுக்கு மம்தா அளித்த பேட்டியில், “இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்பெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது மின்னணு இயந்திர பயன்பாட்டை அவை தடை செய்துள்ளன. எனவே, நாமும் ஏன் மீண்டும் வாக்குசீட்டு முறையை கொண்டு வரக்கூடாது. தேர்தலில் கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியல் கட்சிகளின் வெளிப்படை தன்மையை பராமரிக்கவும் விரும்பினால் தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை