மேற்கிந்திய தீவுக்கு இந்தியா சுற்றுப்பயணம்..ஷமி, புவனேஸ், பாண்டியாவுக்கு ஓய்வு?
மும்பை: மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், ஐபிஎல், உலகக் கோப்பைத் தொடர் என அடுத்தடுத்து ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர்.
டெஸ்ட் சாம்பியன் தொடருக்கான 2 டெஸ்ட் போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி விளையாட உள்ளது. டெஸ்ட் சாம்பியன் தொடரின் ஒவ்வொரு வெற்றியும் முக்கியத்துவமானது.
பொதுவாக வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை வென்றால் அதிக புள்ளிகள் கிடைக்கும் என்பதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இருந்தும், இந்திய அணியின் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. கேப்டன் விராட் கோஹ்லிக்கும், பும்ராவுக்கும் மேற்கிந்திய தீவுகள்அணிகளுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளில் ஏற்கனவே ஓய்வளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஷமி, புவனேஸ்வர்குமார், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கும் ஓய்வளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள், டெஸ்ட் போட்டிகளில் அணிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணி ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கேப்டன் விராட் கோஹ்லி சமீபத்தில் கலந்து கொண்டார். அடுத்த 2 மாதங்களுக்கு ராணுவப் பணியில் ஈடுப்பட உள்ளதால் மூத்த வீரர் தோனி மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து விலகியே உள்ளார்.
இவர், அணியில் இடம்பெறாதது தற்போது உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐக்கு தோனி எழுதிய கடித்தத்தில், ‘துணை ராணுவப் படையில் அடுத்த 2 மாதங்கள் பணியாற்ற உள்ளதால் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியில் பங்கேற்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
எனவே, தோனிக்கு பதில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டுவரை விளம்பர ஒப்பந்தங்கள் இருப்பதால் தோனி ஓய்வு பெற வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
.