பாகிஸ்தானில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை குண்டுவெடிப்பில் 9 பேர் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்வா மாகாணம் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து தேரா இஷமாயில் கானில் உள்ள மருத்துவமனையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கோர தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் போலீசார் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். இத்தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. பெண் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை