நாடாளுமன்ற கூட்டத்தொடர் 3 முதல் 5 நாட்கள் வரை நீடிப்பு?... மசோதாக்கள் நிலுவையால் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடாளுமன்ற கூட்டத்தொடர் 3 முதல் 5 நாட்கள் வரை நீடிப்பு?... மசோதாக்கள் நிலுவையால் ஆலோசனை

புதுடெல்லி,: முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளதால், நாடாளுமன்ற கூட்டத் தொடர் 3 முதல் 5 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்றவுடன் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி தொடங்கியது.

இந்தக் கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட் கடந்த 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் மக்களவையில் பட்ஜெட் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத் தொடர் வரும் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், பட்டியலிடப்பட்டிருந்த அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றும் வகையில் இந்தக் கூட்டத் தொடரை ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத் தொடரை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் இந்த பரிந்துரைக்கு சில எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன.

அத்துடன் பட்ஜெட் மீதான விவாதம் மாநிலங்களவையில் முத்தலாக் தொடர்பான அவசர சட்டம் மசோதா உள்ளிட்ட சில மசோதாவும் நிலுவையில் உள்ளதால், கூட்டத்தொடர் நீடிப்பு இருக்கும் என்ேற கூறப்படுகிறது. அதாவது, 3 முதல் 5 நாட்கள் கூடுதலாக நீடிக்கப்படலாம் என்றும், 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 2 வரை உள்ள வேலைநாட்களில் இந்த நீடிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

27, 28ம் தேதி விடுமுறை நாட்களாகவும், 29, 30, 31, ஆக.

1, 2ம் தேதிகள் கூட்டத்தொடர் நடக்க வாய்ப்புள்ள நாட்களாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை