தேர்வு குழு கூட்டம் ஒத்திவைப்பு இந்திய அணி நாளை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தேர்வு குழு கூட்டம் ஒத்திவைப்பு இந்திய அணி நாளை அறிவிப்பு

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான வீரர்கள் தேர்வு நேற்று திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அணி விவரம் நாளை வெளியாகிறது. பரபரப்பான உலக கோப்பை தொடர் முடிவுக்கு வந்த நிலையில், இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி செப்டம்பர் 4ம் தேதி வரை நடபெற உள்ள இந்த டூரில் இந்தியா 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மும்பையில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் வீரர்களைத் தேர்வு செய்ய இருந்த நிலையில், இந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஷிகர் தவான், விஜய் ஷங்கரின் உடல்தகுதி பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம் என தெரிகிறது.இந்த அறிக்கைகள் இன்று கிடைத்துவிடும் என்பதால், தேர்வுக் குழுவினர் நாளை கூடி இந்திய அணியை அறிவிக்க உள்ளனர். மேலும், தேர்வுக் குழு கூட்டத்தில் பிசிசிஐ செயலர் மற்றும் தலைமை செயல் அதிகாரியின் தலையீடு இருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு கண்டிப்பாக தெரிவித்துள்ளது. தேர்வுக் குழு தலைவரே இனி அணி அறிவிப்பையும் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை