எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஆர்டிஐ திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

தினகரன்  தினகரன்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஆர்டிஐ திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின்  பெரும் எதிர்ப்புக்கு இடையே தகவல் உரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய  அமைச்சர் ஜிஜேந்திர சிங் நேற்று மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2005ம்  ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு அமலில் இருக்கும் தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தில் (ஆர்டிஐ) திருத்தம் செய்வதற்கான மசோதாவை பிரதமர் அலுவலக அமைச்சர்  ஜிஜேந்திர சிங் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இத்திருத்த மசோதாவின்படி, தலைமைத் தகவல் ஆணையர், தகவல்  ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம், இதர மானியங்கள் குறித்த விதிமுறைகளை மத்திய அரசு அரசுதான்  முடிவு செய்யும். மாநில அரசுகள் முடிவு செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும்.  இந்நிலையில், நேற்று மக்களவையில் இது தொடர்பான விவாதத்தின் போது அமைச்சர் ஜிஜேந்திர சிங் பேசியதாவது:தேர்தல்  ஆணையத்தின் பணியும், தகவல் ஆணையத்தின் பணியும் வெவ்வேறானவை. தேர்தல் ஆணையம்  அரசியலமைப்பு சட்டத்தின் ஓர் அங்கம். ஆனால், தகவல் அறியும் உரிமை  சட்டம் 2005ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள மத்திய தகவல் ஆணையம், மாநில தகவல்  ஆணையம் என்பவை அரசியலமைப்பு சட்டம் சாராத அமைப்பாகும். தகவல்  அறியும் உரிமை சட்டத்தின் செயல்பாட்டினை ஒழுங்குபடுத்தவே  இது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் நிர்வாக நோக்கம், சட்ட  செயல்பாடு, கட்டமைப்பு ஆகியவை வலுப்படுத்தப்படும். பிரதமர் மோடி  அரசின் வெளிப்படைத்தன்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஏனெனில்,  அவர் உறுதி அளித்தது போல், குறைந்தளவு எண்ணிக்கையிலான அமைச்சர்களை கொண்டு  அதிகப்பட்ச நிர்வாகத்தை வழங்கி வருகிறார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் காலை  10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே ஆர்டிஐ மனு தாக்கல் செய்ய முடியும்.  ஆனால், மோடி ஆட்சியில் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும்  ஆர்டிஐக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.ஆனால்,  ‘இந்த மசோதா நாட்டில் செயல்படும் கமிட்டிகளின் வெளிப்படைத்  தன்மையை வலுவிழக்க செய்யும்,’ என்று எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில்,  ``தகவல் ஆணையர்களின் சுய அதிகாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இது இருக்கிறது,’’  என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் பேசிய போது, ``இந்த  திருத்த மசோதா மாபெரும் இரண்டு அரசு நிறுவனங்களின் சுய அதிகாரத்தை  ஒழிப்பதற்கான சட்ட திருத்தம்,’’ என்றார். இருப்பினும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மூலக்கதை