வட சென்னை 2 - தனுஷ் விளக்கம் ஏன்?

தினமலர்  தினமலர்
வட சென்னை 2  தனுஷ் விளக்கம் ஏன்?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் முதலானோர் நடித்து, கடந்த ஆண்டு வெளியான படம் 'வட சென்னை'. இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே இரண்டு பாகமாக எடுக்க இருப்பதாக அறிவித்தனர்.

'வட சென்னை' படம் வெளியான பிறகும் கூட அது தொடர்ந்தது. ஆனால் தாமதமானது. இதற்கிடையே, வட சென்னை படத்தில் நடித்த இயக்குநர் அமீரின் பகுதியை மட்டும் தனியாக தொகுத்து ராஜன் பரம்பரை என்ற பெயரில் வெப்சீரியாக உருவாக்க திட்டமிட்டனர். பிறகு அதையும் கைவிட்டனர்.

இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து 'அசுரன்' படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்நிலையில் 'வட சென்னை' படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக ஊடங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனுஷ் டுவிட்டர் மூலம் சமீபத்தில் ஒரு விளக்கத்தை அளித்தார்.

அதில், ''வட சென்னை-2' படம் சம்பந்தமாக வரும் செய்திகளால் ரசிகர்கள் குழப்பமடைய வேண்டாம். அதுபோன்ற தகவல்களை எனது ரசிகர்கள் நம்ப வேண்டாம். 'வட சென்னை-2' திரைப்படம் நிச்சயம் உருவாகும்'' என்று தனுஷ் அதில் பதிவிட்டார்.

ரசிகர்களை தேவையில்லாமல் குழப்ப வேண்டாம் என்பதாலும், அவர் நடித்து வரும் படங்கள் தொடர்பாக தேவையில்லாத வீண் வதந்திகள் மற்றும் சர்ச்சைகளை தவிர்க்கவே இப்படி விளக்கம் அளித்துள்ளார் தனுஷ். மேலும் அவரின் படம் தொடர்பான பிசினஸூம் பாதிக்கலாம் என்பதால் உடனடியாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை