நிதியுதவி அளிப்பதை உலக வங்கி திடீரென கைவிட்டதால் அமராவதி நகரை கட்டமைக்கும் சந்திரபாபு நாயுடுவின் கனவு திட்டத்திற்கு சிக்கல்
ஹைதராபாத் : ஆந்திராவின் தலைநகராக அமராவதி நகரை கட்டமைக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவு திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதை உலக வங்கி திடீரென கைவிட்டுள்ளது. காரணம் எதுவும் குறிப்பிடாமல் உலக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அமராவதி நகர் கட்டமைக்கும் திட்டத்தின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. இந்த திட்டத்திற்காக விளைநிலம் கட்டாயப்படுத்தி கையகப்படுத்தப்படுவதாக ஏராளமான விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். மேலும் கிருஷ்ணா நதிக்கரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த சுற்றுசூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி உலக வஙகி அமராவதி திட்டத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதாக சந்திரபாபு நாயுடு அரசு கூறிவந்தது. அமராவதி திட்டத்திற்கு ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி 200 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க சம்மதித்து இருப்பதாக கூறப்பட்டது. அப்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நிதி கிடைப்பது கேள்விக்குறி ஆகி உள்ளது. இதனால் அமராவதி திட்டம் கைவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.