அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

திஸ்பூர்: அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அசாமில் 28 மாவட்டங்களில் 52 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை குறைந்த போதும் பிரம்மபுத்திரா ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் கரையோர கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது.பிரசித்தி பெற்ற காசிரங்கா பூங்காவின் 90 சதவிகித பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் அசாமில் உள்ள போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மிகமோசமான வெள்ளத்தை அந்த உயிரியல் பூங்கா சந்தித்துள்ளது. மாநிலம் முழுவதும் 26 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், மறுகட்டமைப்புக்காகவும் முதற்கட்டமாக 251 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தில் 12 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 33 பேர் உயிரிழந்தனர். பீகாரில் 40 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 13 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மூலக்கதை