திருவள்ளூர் அருகே பரபரப்பு: தறிகெட்டு ஓடிய போலீஸ் ஜீப் தடுப்பு சுவரில் மோதி நொறுங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் அருகே பரபரப்பு: தறிகெட்டு ஓடிய போலீஸ் ஜீப் தடுப்பு சுவரில் மோதி நொறுங்கியது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய போலீஸ் வாகனம் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயவேல் (48). இவர், இன்று பொன்னேரி அருகே கடலோர பகுதியில் நடைபெறும் ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக திருத்தணியிலிருந்து காரில் நேற்று மாலை புறப்பட்டார்.

வாகனத்தை காவலர் அருண்குமார் ஓட்டி வந்தார். திருவள்ளூர் அருகே சிறுவானூர் என்ற இடத்தில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார், எதிர்பாராதவிதமாக, சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயவேலுக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. அருண்குமாருக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருவரையும் மீட்டு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆபத்தான நிலையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜெயவேல், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை