இந்திய அணி நாளை தேர்வு வெஸ்ட் இண்டீஸ் செல்வாரா டோனி?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தினகரன்  தினகரன்
இந்திய அணி நாளை தேர்வு வெஸ்ட் இண்டீஸ் செல்வாரா டோனி?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு, மும்பையில் நாளை நடைபெறுகிறது. நட்சத்திர வீரர் எம்.எஸ்.டோனி இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். அதற்கேற்ப லீக் சுற்றில் இந்தியா அபாரமாக செயல்பட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அரை இறுதியில் இந்தியா துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறியது. 240 ரன் வெற்றி இலக்கை துரத்திய இந்தியா, தொடக்கத்திலேயே ரோகித், ராகுல், கோஹ்லியின் விக்கெட்டை பறிகொடுத்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. மூவரும் தலா 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. பின் வரிசையில் டோனி - ஜடேஜா பொறுப்புடன் விளையாடி நம்பிக்கை அளித்தாலும், கடைசி கட்டத்தில் இருவரும் அவுட்டானது தோல்விக்கு வழிவகுத்தது.  உலக கோப்பையில் இருந்து வெளியேறிய நிலையில், இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி செப்டம்பர் 4ம் தேதி வரை நடபெற உள்ள இந்த டூரில் இந்தியா 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடைபெறுகிறது.கேப்டன் விராத் கோஹ்லி, வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ள நிலையில், தொடக்க வீரர் ரோகித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்பார். அனுபவ வீரர் டோனி வெஸ்ட் இண்டீஸ் செல்வாரா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் முன்பு போல அதிரடி காட்ட முடியாமல் தடுவாறுவதாக அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் முனைப்புடன் விளையாடவில்லை என்று சச்சினும் விமர்சித்திருந்தார்.ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட டோனி, ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. எனினும், தேர்வுக் குழுவினர் மற்றும் பிசிசிஐ தரப்பில் இருந்து இது குறித்து டோனியுடன் பேசுவார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டனாக முத்திரை பதித்த சாதனை வீரரை, கவுரமாக நடத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. டோனி இடம் பெறாத நிலையில், இளம் வீரர் ரிஷப் பன்ட் வசம் விக்கெட் கீப்பர் பொறுப்பு ஒப்படைப்படைக்கப்படலாம். தினேஷ் கார்த்திக் பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் தொடரலாம். காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து விலகிய தொடக்க வீரர் ஷிகர் தவான், ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கரின் உடல்தகுதி பற்றியும் தேர்வுக் குழுவினர் பரிசீலித்து முடிவு செய்ய உள்ளனர்.

மூலக்கதை