வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது- மத்திய அரசு தகவல்!
வெளிநாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகளை வருவதில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள உலகின் பழமையான கலாச்சாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச்சின்னங்கள், பிரமிக்கத்தக்க கோயில்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மனதை வசீகரிக்கும் இயற்கைத் தோற்றங்கள், வனப்பகுதிகள் மற்றும் யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள் போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினர் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளாக வருவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
பன்னாட்டு விமான நிலையங்கள், தரமான சாலை வசதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் அதிகம் இருப்பதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதில், தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில், 12.1% அதிகரித்து உள்ளது.
2017-ம் ஆண்டு 15.55 மில்லியனாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2018-ம் ஆண்டு 17.42 மில்லியனாக அதிகரித்து உள்ளது என்றும் மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதில் 2014ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.