திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அளித்த பேட்டி:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது நடைமுறையில் உள்ள விஐபி தரிசனத்தில் எல் 1, எல் 2 மற்றும் எல் 3 ஆகிய விஐபி தரிசனங்களை முற்றிலும் ரத்து செய்ய தலைமை செயல் அலுவலரிடம் கலந்தாலோசித்து அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளேன். புரோட்டோகால் அடிப்படையிலும், விஐபி ஆகிய 2 தரிசனங்கள் மட்டும் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஓரிரு நாட்களில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.நீதிமன்றத்தில் விஐபி தரிசனம் குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காகவே அறங்காவலர் குழு அதிகாரிகள் உள்ளோம். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்லவேண்டிய அவசியம்  இல்லை. கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக எல்1, எல்2 மற்றும் எல்3 என்ற பிரிவினையை கொண்டு வந்து பக்தர்கள் மத்தியில் கோபத்திற்கு உள்ளாகி நீதிமன்றத்திற்கு சென்று உள்ளனர். எனவே நீதிமன்றத்தின்  உத்தரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல், எல் 2, எல் 3 ஆகிய தரிசனங்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும். சட்ட பதவியில் உள்ள புரோட்டோகால் படி உள்ளவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் எவ்வாறு தரிசனம் செய்வது என்பது  குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து வழங்கினால் அவற்றை அமல்படுத்தப்படும்.தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் தேவஸ்தான அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது அமராவதியில் தேவஸ்தானத்திற்கு தனி அலுவலகம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஏற்கனவே அமராவதியில் வெங்கடேஸ்வர  சுவாமி கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தலைநகரில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவருக்கு புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்கும், ஆன்லைன் மூலமாக டிக்கெட்டுகளை  பதிவு செய்து கொள்வதற்கும் பக்தர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

மூலக்கதை