உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொடூரம்: திருமணமான 24 மணி நேரத்தில் இளம் பெண்ணுக்கு முத்தலாக்

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொடூரம்: திருமணமான 24 மணி நேரத்தில் இளம் பெண்ணுக்கு முத்தலாக்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணையாக இருசக்கர வாகனம் கொடுக்கப்படாததால் திருமணமான 24 மணி நேரத்தில் இளம் பெண்ணிற்கு ஒருவர் முத்தலாக் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப் பிரதேச மாநிலம் ஜாகன்ஹிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹே ஆலம் என்பவருக்கும் ருக்சனா பனோ என்ற பெண்ணுக்கும்  கடந்த ஜூலை 13-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு கூறியபடி, பெண் வீட்டார் வரதட்சணையாக இருசக்கர வாகனம் கொடுக்காததால், திருமணமான 24 மணி நேரத்தில் ருக்சனாவுக்கு முத்தலாக் கூறி ஷாஹே ஆலம் விவாகரத்து செய்துள்ளார். இதனால், மணப்பெண்ணும், பெண் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். அதனையடுத்து, பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் ஆலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை முடிவடைந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.முத்தலாக் தடை மசோதா:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய அரசு முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறையை நீக்குவதற்காக மக்களவையில் சட்டமசோதா கொண்டுவந்து நிறைவேற்றியது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றாமல் நிலுவையில் இருந்தது. பின்னர் இதற்காக 2 முறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர்  மோடி தலைமையிலான 2-வது ஆட்சியில் நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் கடந்த மாதம் முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை