மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

தினகரன்  தினகரன்
மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: மும்பையில் 100 ஆண்டு பழமையான  4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்  மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த கட்டிடம் பலவீனமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பை டோங்கிரி பகுதியில் இன்று மதியம் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல்  அறிந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிட விபத்தில் 5 உயிரிழந்துள்ள நிலையில் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றன. மேலும் கட்டிடத்தின்  இடிபாடுகளின் அடியில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து நடந்த பகுதி மிகவும் குறுகலான பகுதி என்பதால் பெரிய வாகனங்களை கொண்டு வருவதோ அல்லது இயந்திரங்களை கொண்டு வருவது  கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கட்டட விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராதிப்பதாகவும் பிரதமர்  கூறியுள்ளார். கட்டட விபத்து மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேட்டி: கட்டட விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், எனக்கு கிடைத்த ஆரம்ப தகவல்களின்படி, இடிந்து விழுந்ததில் சுமார் 15 குடும்பங்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த  கட்டிடம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிக்கிய மக்களை மீட்பதில் முழு கவனம் செலுத்தப்படுகிறது. விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் நிவாரண நிதி  அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை