2023ல் இந்தியாவில் உலக கோப்பை போட்டி: ஆசிய மண்ணுக்கு வாங்க அப்புறம் இருக்கு...இங்கிலாந்து கோப்பையை தக்கவைப்பதில் சிக்கல்
மும்பை: அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடக்கவுள்ளதால், இங்கிலாந்து அணி தங்களின் கோப்பையை தக்க வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா (2011), ஆஸ்திரேலியா (2015) அணிகளை தொடர்ந்து இங்கிலாந்து (2019) அணி சொந்த மண்ணில் வென்று சாதித்தது.
இந்நிலையில் அடுத்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு சொந்தமண் பலம் சாதகமாக செயல்பட்டாலும், ஆசிய அணிகளான பாகிஸ்தான், வங்கதேச அணிகளிடம் இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டதை கண்கூடாக காணமுடிந்தது.
அதனால் அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடப்பதால், இங்கிலாந்து அணி தங்களின் கோப்பையை தக்க வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இதற்கு முன்பாக 3 முறை நடந்துள்ளது.
அதில் 1987ல், பாகிஸ்தான் உடனும், 1996ல் இலங்கை, பாகிஸ்தான் உடனும், 2011ல் இலங்கை, வங்கதேச நாடுகள் உடனும் இணைந்து இந்தியா உலகக்கோப்பை தொடரை நடத்தியது. ஆனால், வரும் 2023ல் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக்கோப்பை தொடரை நடத்தவுள்ளதால், இம்முறை வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணி அடுத்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என தெரிகிறது.
2023ல் உலகக்கோப்பை தொடரின் ஃபைனல் மும்பையில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கைக்கு அருகில் கிடைத்த வாய்ப்பை இந்திய அணி வீரர்கள் தற்போது கோட்டைவிட்டதால், தற்போது 4 ஆண்டுகல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது நடக்கவுள்ள உலக கோப்பை போட்டியில், சீனியர் வீரர் தோனி, பெரும்பாலும் இந்திய அணியில் இடம்பெறமாட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அவருக்கு ஆதரவாக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து அணியில் இடம் பெறவேண்டும் என்றே விரும்புகின்றனர்.
.