ஆந்திராவில் அடுத்த குடைச்சல் சந்திரபாபு நாயுடு தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் அடுத்த குடைச்சல் சந்திரபாபு நாயுடு தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு

திருமலை: ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவருடைய கட்சி படுதோல்வியை சந்தித்து, ஒய்எஸ்ஆர் காங்கிரசிடம் ஆட்சியை பறி கொடுத்தது. இக்கட்சியை சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார். அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சந்திரபாபு நாயுடுக்கு பல்வேறு வகையில் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தேர்தல் வெற்றியை எதிர்த்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்  சித்தூர் பொறுப்பாளர் வித்யா சாகர் என்பவர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ‘தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனது சொத்துக்கள் குறித்து தெரிவித்த தகவலில், உண்மைகளை மறைத்துள்ளார்.  உண்மையை மறைத்ததால், அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை