ஜேசன் ராய்க்கு அபராதம் | ஜூலை 12, 2019
பர்மிங்காம்: அரையிறுதியில் அம்பயருக்கு எதிராக மோசமாக நடந்து கொண்ட இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் இங்கிலாந்து அணி துவக்க வீரர் ஜேசன் ராய், 85 ரன் எடுத்திருந்த போது, கம்மின்ஸ் பந்தில் (19 வது ஓவர்) விக்கெட் கீப்பரிடம் ‘கேட்ச்’ ஆனதாக அவுட் கொடுத்தார் அம்பயர் தர்மசேனா (இலங்கை).
ஆனால் பந்து பேட்டில் படவில்லை என கூறிய ஜேசன் ராய், கிரீசை விட்டு நகர மறுத்தார். மற்றொரு அம்பயர் எராஸ்மசிடம் (தெ.ஆப்.,) தெரிவித்து, விவாதம் செய்தார். ‘டி.ஆர்.எஸ்.,’ வாய்ப்பும் ஏற்கனவே முடிந்த நிலையில் வேறு வழியில்லாமல் திரும்பினார். ‘ரீப்ளேயில்’ பந்து பேட்டில் படாதது தெரியவந்தது.
இருப்பினும் ஜேசன் ராய் செயல் ஐ.சி.சி., நடத்தை விதிகளை மீறியது என்பதால், தவறினை ஒப்புக் கொண்ட அவருக்கு, போட்டி சம்பளத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்துடன் 2 தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டன.