சோமாலியாவில் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய 2 விமானத் தாக்குதல்களில் 37 பேர் பலி

தினகரன்  தினகரன்
சோமாலியாவில் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய 2 விமானத் தாக்குதல்களில் 37 பேர் பலி

மொகாதிஷு : ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய 2 விமானத் தாக்குதல்களில் 37 பேர் உயிரிழந்தனர்.சோமாலியாவில் இருந்து செயல்படும் அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் ஐஎஸ் இயக்கத்தின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் மொகாதிஷூ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அமெரிக்க விமானப்படை விமானங்கள் அடுத்தடுத்து 2 தாக்குதல்கள் நடத்தின.முதல் தாக்குதல் ஆளில்லாத ட்ரோன் விமானங்களால் அல் ஷபாப் முகாமை இலக்காக கொண்டு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை கமாண்டர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் நடத்தப்பட்ட 2வது தாக்குதலில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக கடந்த வாரம் சோமாலியாவின் மொகடிஷு நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி  50  பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்கா 31 விமானத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

மூலக்கதை