சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு மனு

தினகரன்  தினகரன்
சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு மனு

டெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கோரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் கோரி திருவிதாங்கூர்  தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோவில் ஆசாரத்திற்கு எதிரானது என போர்க்கொடி தூக்கிய ஐயப்ப பக்தர்கள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்துள்ள மறு சீராய்வு மனுக்களை வரும் ஜனவரி மாதம் 22-ல் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதே சதயம் இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமலில் இருக்கும் என கூறிவிட்டது. இதனால் ஜனவரி 22 மறுஆய்வு மனுக்கள் விசாரணை நடைபெறும் நாள் வரை சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஐயப்ப பக்தர்களின் கோபத்தால் மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்களின் போது அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று உளவு துறையும் எச்சரித்தது.இதனையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. அந்த வசதிகளை சபரிமலையில் ஏற்படுத்தும் வரை பெண்களை அனுமதிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவை பொருத்தே சபரிமலையில் இனிவரும் நாட்களில் சுமூக நிலை ஏற்படுமா என தெரிய வரும்.

மூலக்கதை