ரணில் - ராஜபக்சே எம்பி.க்கள் 2ம் நாளாக மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடி வீசி தாக்குதல் : சபாநாயகர் இருக்கையை கைப்பற்றி கோஷம்

தினகரன்  தினகரன்
ரணில்  ராஜபக்சே எம்பி.க்கள் 2ம் நாளாக மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடி வீசி தாக்குதல் : சபாநாயகர் இருக்கையை கைப்பற்றி கோஷம்

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் 2வது நாளாக நேற்றும் கடும் அமளி நடந்தது. ராஜபக்சே ஆதரவு எம்பி.க்கள் சபாநாயகர், போலீசார் மீது மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், சபாநாயகரின் இருக்கையை ஆக்ரமித்து கண்டன கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால், நாளை மறுதினம் வரை அவையை சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார். இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக மகிந்தா ராஜபக்சேவை அறிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே ேதால்வி அடைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சேவும், அவருடைய ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் நாடாளுமன்ற கூட்டத்தில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். அடிதடி சண்டையில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை அவை மீண்டும் கூடியது. அப்போது, நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களுடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா உள்ளே நுழைந்தார். ஆனால், அவரது இருக்கையை ராஜபக்சே தரப்பு எம்பி.க்கள் ஆக்ரமித்துக் கொண்டனர். எம்பி அருண்திகா பெர்ணான்டோ, சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவரைச் சுற்றி நின்ற ராஜபக்சே எம்பிக்கள் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டனர். சபாநாயகர் எவ்வளவு முயன்றும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.ராஜபக்சே ஆதரவாளர்கள், புத்தகங்களையும் இருக்கையையும் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதில், காமினி ஜெயவிக்ரேமா எம்பிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவைக்கு கத்தியுடன் வந்த ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்பிக்கள் 2 பேரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ராஜபக்சே தரப்பு எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, 45 நிமிடம் பொறுத்திருந்த சபாநாயகர்,  போலீசாரை உள்ளே வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், நாளை மறுதினம் வரை அவையை ஒத்திவைப்பதாக அறிவித்து அங்கிருந்து வெளியேற முயன்றார். அவரையும் சில எம்பிக்கள் சூழ்ந்து கொண்டனர். போலீசார் உள்ளே நுழைந்து சபாநாயகரை பத்திரமாக மீட்டுச் சென்றனர். பின்னர் அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதன்காரணமாக, இலங்கை நாடாளுமன்றத்தில் 2வது நாளாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.முன்னதாக, அவைக்குள் போலீசார் நுழைந்ததும் அவர்கள் மீதும், ரணில் ஆதரவு எம்பி.க்கள் மீதும் ராஜபக்சே ஆதரவு எம்பி.க்கள் மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தடுக்க வந்த போலீசாரை, சில எம்பி.க்கள் இருக்கைகளை தூக்கி அடிக்க பாய்ந்தனர். இது போன்ற சம்பவங்கள் இதுவரை இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்ததில்லை. மேலும், சபாநாயகருக்கே போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டதும் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

மூலக்கதை