யுவராஜ் சிங் மற்றும் கௌதம் கம்பீர் ஐபிஎல் அணியில் இருந்து நீக்கம்

தினகரன்  தினகரன்
யுவராஜ் சிங் மற்றும் கௌதம் கம்பீர் ஐபிஎல் அணியில் இருந்து நீக்கம்

மும்பை: ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டன. நவம்பர் 15 உடன் ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் செய்ய விரும்பும் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதையொட்டி, ஐபிஎல் அணிகள் அனைத்தும் சில வீரர்களை நீக்கி உள்ளன. இதில் சில முன்னணி இந்திய வீரர்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் முன்னணி வீரர்களாக இருந்த யுவராஜ் சிங் மற்றும் கௌதம் கம்பீர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் இருவரும் கடந்த ஐபிஎல் 2018 சீசனில் மிகவும் மோசமான செயல்பாடுகளை கொண்டிருந்தனர். சென்ற சீசனில் கௌதம் கம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்தார். தொடரின் பாதியில் டெல்லியின் தோல்விகள் மற்றும் தனது மோசமான பேட்டிங்கை ஒப்புக்கொண்டு கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங் நட்சத்திர வீரராக இருந்தார். ஒரு போட்டியில் கூட சொல்லிக் கொள்ளும்படி ரன் குவிக்கவில்லை. யுவராஜ் சென்ற முறை நடந்த ஏலத்தில் கூட தன் அடிப்படை விலையான 2 கோடிக்கு தான் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு வீரர்களுக்கும் வயதாகி விட்டது. மேலும், ரன் குவிப்பில், பீல்டிங்கில் முன்பு இருந்த வேகம் இல்லை. தற்போது ஐபிஎல் அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ள இருவரும் ஏலத்தில் இடம் பெறுவார்கள். அனேகமாக இவர்கள் இருவரையும் எந்த அணியில் ஏலத்தில் எடுக்காது என்றே தெரிகிறது. கிட்டத்தட்ட இவர்களின் ஐபிஎல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

மூலக்கதை