கம்யூட்டர் பயன்படுத்தாத ஜப்பான் அமைச்சர்

தினமலர்  தினமலர்
கம்யூட்டர் பயன்படுத்தாத ஜப்பான் அமைச்சர்

டோக்கியோ : யுஎஸ்பி டிரைவ் பற்றிய கேள்விக்கு பதிலளித்த, முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜப்பானிய அமைச்சர் ஒருவர், தான் கம்யூட்டரே பயன்படுத்துவதில்லை என பதிலளித்துள்ளார்.

தகவல் திருட்டு:


ஜப்பான் சைபர் பாதுகாப்பு துணை தலைவரும், 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு துறை அமைச்சருமாக இருப்பவர் யோஷிடாகா சகுரதா (68). ஜப்பான் அணுசக்தி நிலையங்களில் யுஎஸ்பி டிரைவ்கள் பயன்படுத்தப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டதாக ஜப்பான் பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இதற்கு பதிலளித்த யோஷிடாகா, நான் எனது 25 வது வயது முதல் எனது துறை ஊழியர்களுக்கும், செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்கி வருகிறேன். நானாக கம்யூட்டர்களை பயன்படுத்தியதில்லை என தெரிவித்துள்ளார்.
யோஷிடாகாவின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள், கம்யூட்டர்களையே தொடாத ஒருவர் சைபர் பாதுகாப்பு கொள்கைகளுக்கு பொறுப்பாளராக இருப்பது நம்ப முடியாததாக உள்ளது என தெரிவித்துள்ளன.

இது போன்று பொறுப்பற்ற முறையில் பதிலளிக்க அவருக்கு வெட்கமாக இல்லையா என பலரும் யோஷிடாகாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சைபர் பாதுகாப்பு துறை துணை தலைவராக யோஷிடாகா மாற்றப்பட்டு ஒரு மாதம் மட்டுமே ஆகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபேயின் கட்சி மீண்டும் தேர்வானதை அடுத்து அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது தான் யோஷிடாகா சைபர் பாதுகாப்பு துறை பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை