ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம்: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கடும் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம்: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கடும் மோதல்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இருதரப்பு எம்பிக்களும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா திடீரென நீக்கினார். புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார்.

இது இலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றதை எதிர்த்து ரணில் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர்.

ஜனநாயக முறையில் சட்டவிதிகளை பின்பற்றும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிபர் சிறிசேனாவை வலியுறுத்தின. இந்நிலையில், நாடாளுமன்றம் நவம்பர் 14ம் தேதி கூடும் என அறிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்பிக்களிடம் ராஜபக்சே தரப்பினர் பேரம் பேசினர்.

16 எம்பி. க்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிக்க திட்டவட்டமாக மறுத்து விட்டது. ரணிலுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்தது.

இதனால், ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பது உறுதியானது. சிறிசேனாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால், கடந்த வெள்ளிக்கிழமை திடீரென நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ரணில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று நாடாளுமன்றம் கூடியது.

அப்போது, ராஜபக்சே அரசுக்கு எதிராக ரணில் தரப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

போதுமான எம்பி. க்களின் ஆதரவு இல்லாததால் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இதனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை தடுக்கும் வகையில் ராஜபக்சேவும், அவருடைய ஆதரவு எம்பி. க்களும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு இடையிலும் குரல் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார்.

122 எம்பி. க்களின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்ற நிலையில், ராஜபக்ேச வெளிநடப்பு செய்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது குறித்து அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் ெஜயசூர்யா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை ராஜபக்சே ஏற்க மறுத்துள்ளார்.

இதனால், இலங்கையில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. ராஜபக்சே அரசு படுதோல்வி அடைந்துள்ள நிலையில், முந்தைய நிலையே தொடரும் என்றும், ராஜபக்சே பிரதமராக நீடிக்க முடியாது என்று ரணில் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு அதிகாரிகள் யாரும் ராஜபக்சேவின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என ரணில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், நாடாளுமன்றம் இன்று காலை மீண்டும் கூடியது. ராஜபக்சே, ரணில் ஆதரவாளர் அனைவரும் அவைக்கு வந்திருந்தனர்.

ராஜபக்சே பேச எழுந்தபோது அவரை பேச விடாமல் ரணில் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். மேலும், ராஜபக்சேவை ‘டம்மி’ என்று கூறி கிண்டல் செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபக்சேவின் ஆதரவாளர்களும் கோஷமிட்டனர். அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்நிலையில், இருதரப்பு எம்பிக்களும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை