தோளில் போட்டு படம் எடுத்தபோது பாம்பு கடித்து வாலிபர் சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தோளில் போட்டு படம் எடுத்தபோது பாம்பு கடித்து வாலிபர் சாவு

திருமலை: தோளில் மாட்டிக்கொண்டு செல்போனில் படம் பிடித்தபோது பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் மங்கலபாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (26), விவசாயி. இவர் சூலூர்பேட்டையில் உள்ள சினிமா தியேட்டருக்கு  நண்பர்களுடன் சினிமா பார்க்க நேற்று முன்தினம் சென்றார்.

அப்போது அங்கு பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்து சாகசம் காட்டி பிச்சை  எடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஜெகதீசுக்கு பாம்புடன் செல்பி எடுக்க ஆசை வந்தது.

இதை பாம்பாட்டியிடம் கூறியுள்ளார். அவரும் ஜெகதீஷ் ஆசைப்படி  அவரது தோள்மீது பாம்பை மாலை போல் போட்டுள்ளார்.

இதன்பிறகு ஜெகதீஷ் பாம்பை பிடித்தபடி நின்றார்.

நண்பர்கள் தங்களது செல்போனில் போட்டோ எடுத்தனர். அப்போது திடீரென பாம்பு ஜெகதீஷை  கொத்திவிட்டது.

இதில் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை நண்பர்கள் சூலூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாம்பாட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை