மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நாளை கடைமுக தீர்த்தவாரி
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்படுகிறது.
இதன்படி கடந்த மாதம் 18ம் தேதி துலா மாத பிறப்பு தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. கடந்த 7ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும் கொடியேற்றமும் நடந்தது.
நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப் பின்னர், அபயாம்பிகையும் மாயூரநாதர் சுவாமியும் திருமண கோலத்தில் முன் மண்டபத்தில் எழுந்தருளினர். மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், சுமங்கலி பெண்கள் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ம்பலவாணதம்பிரான் சுவாமிகள், சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாதசிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று மாலை தேரோட்டமும், நாளை துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி பெருவிழாவும் நடைபெறுகிறது.