திருவாரூர் கோயிலில் 2ம் நாளாக சிலைகள் சோதனை
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த 650 கோயில்களுக்கு சொந்தமான சுமார் 3500க்கும் மேற்பட்ட சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து ஐ. ஜி.
பொன்மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக கடந்த மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளிலும், 2ம் கட்டமாக கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரையிலும் நடைபெற்ற சோதனையில் மொத்தம் 513 சிலைகள் சோதனை செய்யப்பட்டன.
இந்நிலையில் 3ம் கட்ட சோதனை நேற்று துவங்கியது.
திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள 21 கோயில்களை சேர்ந்த சிலைகள் சோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. தொல்லியல் துறை சார்பாக தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையிலான அலுவலர்களும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் பழனிச்செல்வம், மலைச்சாமி தலைமையிலான போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 9. 30 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற சோதனையில் மொத்தம் 111 சிலைகள் சோதனை செய்யப்பட்டன.
இந்நிலையில் 2ம் நாளாக இன்று காலை 9. 30 மணியளவில் சோதனை துவங்கியது. தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை சந்திரசேகரசுவாமி கோயில், ரெங்கநாதபெருமாள் கோயில், விஸ்வநாத சுவாமி கோயில், அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்சிற்றம்பலம் புறத்தனவணேஸ்வரர் கோயில், பேராவூரணி மருங்காபள்ளம் ஒளததீஸ்வரர் கோயில், பெருமகளூர் சோமநாதசுவாமி கோயில், விளாங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில், அம்மணிசத்திரம் ராமசாமி கோயில், கழனிவாசல் பாலசுப்ரமணியசுவாமி கோயில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திருமகோட்டை கனபுரீஸ்வரர் கோயில், ரெங்கநாதபெருமாள் கோயில், நொச்சியூர் மாரியம்மன் கோயில், சோழபாண்டி மாரியம்மன் கோயில், மெய்யக விநாயகர் கோயில், திருவாரூர் மருதப்பட்டினம் அபிமுகதீஸ்வரர் கோயில், அடியக்கமங்கலம் விஸ்வநாதர்சுவாமி கோயில், நெடுங்குடி கைலாசநாதர் கோயில், கல்யாணமகாதேவி வரதராஜபெருமாள் கோயில், விஜயபுரம் கபிலேஸ்வரர் கோயில், பழையவலம் அகத்தீஸ்வரர் கோயில் என மொத்தம் 21 கோயில்களின் சிலைகள் இன்று சோதனை செய்யப்படுகின்றன.