திருமயத்தில் பரபரப்பு தாலி கட்டிகொள்ள மறுத்த இளம்பெண்: திருமணம் நின்றதால் பெற்றோர் வேதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருமயத்தில் பரபரப்பு தாலி கட்டிகொள்ள மறுத்த இளம்பெண்: திருமணம் நின்றதால் பெற்றோர் வேதனை

திருமயம்: தாலி கட்டும் நேரத்தில் திருமணம் வேண்டாம் என்று இளம்பெண் எழுந்து சென்றதால் பெரும் பரபரப்பும் உறவினர்கள் மத்தியில் வேதனையும் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு  செய்யப்பட்டது. இதன்படி திருமயம் கோட்டை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று இவர்களது திருமணம் நடக்க இருந்தது.

திருமணத்திற்கு வந்த  உறவினர்களை வரவேற்க வரவேற்பு விருந்துக்கு மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்னதாக திருமயம் பெருமாள் கோயிலில் திருமணத்தை நடத்தி அதன் பின்னர் மண்டபத்தில் வரவேற்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமண  வேலையில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் கோயிலில் மணவறையில் மணமகன், மணமகளுக்காக மணக்கோலத்தில் காத்திருந்தார். அப்போது  திடீரென மணமகள், ‘’எனக்கு இப்போது திருமணம் வேண்டாம்’’என கூறி மண மேடையில் இருந்து எழுந்துவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மாப்பிள்ளை  மற்றும் இரு வீட்டாரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதன்பின்னர் மணமகளை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானப்படுத்தியும் கடைசி வரை திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக இரு  வீட்டாருக்கும் இடையே பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.   போலீசார் பேசி, பிரச்னையை தீர்த்துவைத்தனர். இருப்பினும் திருமணத்துக்கு இளம்பெண் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து மணமக்களின் பெற்றோர்கள்,  உறவினர்கள் கடும் வேதனையுடன் வீடு திரும்பினர். தாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மணமக்கள் சம்மதிக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பையும் உறவினர்கள் மத்தியில் கடும்  அதிர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டது.

.

மூலக்கதை