தமிழக, கர்நாடக வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு போலீசார் திடீர் ரோந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக, கர்நாடக வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு போலீசார் திடீர் ரோந்து

சத்தியமங்கலம்: தமிழக, கர்நாடக வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு போலீசாரும் அதிரடிப்படை போலீசாரும்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். தமிழக, கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பு கருதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தமிழக-கர்நாடக  எல்லையில் உள்ள பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கடம்பூர், பர்கூர் மற்றும் வெள்ளித்திருப்பூர் பகுதிகளில் ரோந்து செல்ல நக்சல் ஒழிப்பு பிரிவு போலீஸ் குழு  அமைக்கப்பட்டு அக்குழுவினர் தொடர்ச்சியாக ரோந்துப்பணி மேற்கொள்கின்றனர்.

மலைகிராமங்களில் புதிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை தெரியப்படுத்தக் கோரி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும்  வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட சத்தியமங்கலம் அதிரடிப்படை போலீசாரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடம்பூர் மலைப்பகுதியில் அடர் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் நக்சல் ஒழிப்பு பிரிவு போலீசாரும், அதிரடிப்படை போலீசாரும்  நேற்றுமுன்தினம் ரோந்து சென்றனர்.

இப்பகுதியில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் நடமாட்டம் இல்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்துப்பணி  மேற்கொண்டு வருவதாகவும் அக்குழுவினர் தெரிவித்தனர்.

.

மூலக்கதை