பாம்பாட்டியிடம் இருந்த பாம்புடன் போட்டோ எடுக்க முயன்ற வாலிபர் சாவு

தினகரன்  தினகரன்
பாம்பாட்டியிடம் இருந்த பாம்புடன் போட்டோ எடுக்க முயன்ற வாலிபர் சாவு

திருமலை: ஆந்திராவில் பாம்புடன் போட்டோ எடுக்க முயன்ற விவசாயி பரிதாபமாக பலியானார். ஆந்திராவின் சூலூர் பேட்டை மண்டலம், மங்கலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (26). விவசாயி. இவர், சூலூர்பேட்டையில் நண்பர்களுடன் சினிமா பார்ப்பதற்காக நேற்று முன்தினம் வந்துள்ளார். தொடர்ந்து ஜிஎன்டி சாலையில் உள்ள ஒரு தர்கா அருகே பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஜெகதீஷ் பாம்புடன் போட்டோ எடுக்க முயற்சி செய்தார். அப்போது பாம்பாட்டி ஜெகதீஷ் தோள்மீது பாம்பை போட்டுள்ளார். இதையடுத்து ஜெகதீஷ் பாம்பை பிடித்தபடி நின்றார். அவரை நண்பர்கள் தங்களது செல்போனில் போட்டோ எடுத்தனர். அப்போது திடீரென பாம்பு ஜெகதீஷை கடித்தது.இதில், ஜெகதீஷ் மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ஜெகதீஷை மீட்டு, சிகிச்சைக்காக சூலூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பாம்பாட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை