நடுரோட்டில் தீவைத்து நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண்; கோவையில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடுரோட்டில் தீவைத்து நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண்; கோவையில் பரபரப்பு

கோவை: நடுரோட்டில் லாந்தர் விளக்கில் தீ பற்றவைத்து இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடியது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. வடகோவை ரயில்நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் ஒரு இளம்பெண்ணும் 3 இளைஞர்களும் நின்று கொண்டிருந்தனர்.

இவர்கள் பறக்கும் லாந்தர் எனப்படும் மெல்லிய கம்பி மற்றும் பாலீத்தின் பையால் ஆன பாராசூட் கீழ் பகுதியில் உள்ள திரியில் தீப்பற்ற வைத்து பாலத்தின் மேல் நின்று கொண்டு கீழே பறக்க விட்டனர். இந்த பறக்கும் லாந்தர் விளக்குகள் பாலத்தின் கீழ்புறம் உள்ள சாலைகளில் விழுந்து அணைந்தது.

அப்போது இளைஞர்களுடன் இளம்பெண் உற்சாகமாக லாந்தர்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இளம்பெண் மற்றும் இளைஞர்களின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த சம்பவத்தை தங்களது செல்போன் மூலம் வீடியோ  எடுத்து சம்பந்தப்பட்ட இளம்பெண், இளைஞர்களிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த இளம் பெண் சென்னையை சேர்ந்தவர் என்பதும் பிறந்தநாள் என்பதால், கோவையில் உள்ள தன் நண்பர்களுடன் நள்ளிரவு மேம்பாலத்திற்கு வந்து தீ பற்ற வைத்து பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் தெரியவந்தது.

மேலும், விசாரித்தவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன், இளம் பெண் மற்றும் அந்த மூன்று வாலிபர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.

.

மூலக்கதை