வாரணாசியில் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து முனையம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

தினகரன்  தினகரன்
வாரணாசியில் முதல் உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து முனையம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

லக்னோ : உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்துக்காக வாரணாசி நகரில் உள்ள கங்கை ஆற்றில் அமைக்கப்பட்ட முதல் முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். வாரணாசியில் உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் ரூ.5,369.18 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்நிலை சரக்கு கப்பல் போக்குவரத்து முனையம் கட்டப்பட்டது. இந்த பல்வகை முனையத்தின் மூலமாக 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் 2000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன. இந்திய நீர்வழி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி ஹல்தியா-வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் சுமார் 2 ஆயிரம் எடையுடன் சரக்கு கப்பல்கள் சென்று வரும் வகையில், இந்த முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த திட்டமானது ஹல்தியா, சாஹிப்கஞ்ச், வாரணாசி ஆகிய பகுதிகளில் சரக்கு முனையங்கள் அமைத்து விரிவுப்படுத்தபடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் கங்கை ஆற்றில் அமைக்கப்பட்ட முதல் உள்நாட்டு நீர்நிலை சரக்கு கப்பல் போக்குவரத்து முனையத்தை தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து ரூ.1,571.95 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வாரணாசி நாற்கர விரைவு நெடுஞ்சாலை மற்றும் பாபத்பூர்-வாரணாசி நெடுஞ்சாலைகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த புதிய சாலைகள் மூலம் லக்னோ-வாரணாசி, அசாம்கர்-வாரணாசி, கோரக்பூர்-வாரணாசி, அயோத்தியா வாரணாசி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை