பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந் மத்திய அமைச்சர் அனந்த்குமார் திடீர் மரணம்: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) இன்று காலை சிகிச்சை பலன் இன்றி காலமானார். இவரது மறைவையொட்டி, கர்நாடக அரசு விடுமுறை அறிவித்திருப்பதுடன் தேசிய ெகாடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. கர்நாடக மாநில பாஜவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அனந்த்குமார்.
மாநிலத்தில் ஹுப்பள்ளியில் எச். என். நாராயணசாஸ்த்திரி-கிரிஜம்மா தம்பதியரின் மகனாக 1959 ஜூலை 22ம் தேதி பிறந்தார். பி. ஏ. எல். எல். எம்.
பட்டம் முடித்த அவர், கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பின் ஆர். எஸ். எஸ்.
இயக்கத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். மறைந்த முன்னாள் பிரதமர் ஏ. பி. வாஜ்பாய் உள்பட ஆர். எஸ். எஸ்.
மற்றும் பாஜ மூத்த தலைவர்களுடன் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தார்.
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினராக ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்த 1996 பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதியில் முதல் முறையாக பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 1998, 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார். மத்தியில் வாஜ்பாய் தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் விமானப் போக்குவரத்து மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தார்.
தற்போதைய நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் உரம் மற்றும் ரசாயன துறை அமைச்சராக இருந்தார். சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆரம்பத்தில் லண்டனிலும், கடந்த மாதம் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றார். கடந்த மாதம் 20ம் தேதி அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய அவர் பெங்களூரு பசவனகுடியில் உள்ள சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார். அவருக்கு தேஜேஸ்வி என்ற மனைவியும், ஐஸ்வர்யா மற்றும் விஜயேதா ஆகிய இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
அவரின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு சென்ற பின் பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மாநில ஆளுநர் வி. ஆர். வாலா, எம்பிகள் கே. எச். முனியப்பா, ராமமூர்த்தி, ரகுமான்கான் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூரு வந்த பிரதமர் மோடியும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அனந்த்குமார் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் இரங்கல் ெதரிவித்துள்ளனர். அனந்த்குமார் உடல் நாளை காலை சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
அவரின் மறைவுக்கு கர்நாடக அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்துள்ளதுடன் இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் அனந்த்குமார் கடந்த மாதம் மூச்சு திணறல், இருமலால் அவதிப்பட்டுவந்தார். கடந்த மாதம் லண்டன் சென்றிருந்தார்.
அங்கு தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து மூச்சு திணறல் மற்றும் இருமலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், கடந்த மாதம் 19ம் தேதி பெங்களூருவுக்கு திரும்பினார்.
ஆனால், 20ம் தேதி மீண்டும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மு. க. ஸ்டாலின் இரங்கல்
மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவுக்கு, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.