மேக் இன் ஒடிசா திட்டத்தில் கூடுதலாக ரூ.3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மேக் இன் ஒடிசா திட்டத்தில் கூடுதலாக ரூ.3,000 கோடி முதலீடு: முகேஷ் அம்பானி அறிவிப்பு

புவனேஸ்வர்: மேக் இன் ஒடிசா திட்டத்தின் கீழ் ஒடிசாவில் கூடுதலாக 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மேக் இன் ஒடிசா மாநாடு மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ஒடிசாவில் ரிலையன்ஸ் குழுமம் ஏற்கனவே 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக ரூ.3000 கோடி முதலீடு செய்வதற்கான உறுதியை அளிப்பதாக தெரிவித்தார். மேலும், ஒடிசாவில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் 48,000 கிராமங்களை ஜியோ சேவை சென்றடைந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த சில மாதங்களில் பெருபாலான கிராம மக்கள் ஜியோ சேவையை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மேக் இன் ஒடிசா என்பது விரைவில் மேக் இன் நியூ ஒடிசா என்பதாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்திய தகவல் தொழில்நுட்பத்தில் ஜியோ முன்னணியில் உள்ளதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், உலகம் தற்போது தொழில்நுட்ப புரட்சியில் செழித்து வருவதாக குறிப்பிட்டார்.

மூலக்கதை